நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மூன்றாம் நாளில் என் பக்கத்தில் புதிதாய் ஒருவன் வந்து சேர்ந்தான். வெடவெட உருவம் , பொருந்தாத கால்சட்டையும் , சிறிது கிழிந்து தைத்த மேல்சட்டையுமாய் இருந்தான். பேர் என்னடா என்கையில் மார்க்ஸ் என்றான். மார்க்ஸா எவ்ளோ என்று பசங்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். என் ஆசிரியர் உள்ளூர்க்காரர் வந்தவுடனே என்னைப்பார்த்து நீ முன்னாடி பெஞ்சுக்கு வா, உன்னை என் கண் பார்வையிலேயே வச்சிருக்கனும் என்றார்.
நடு நடுவில் அவன் ஊரில் தோழர்களின் ஊர்வலத்தில் அவனை அவன் அப்பாவுடன் பார்த்திருக்கிறேன். அவர் இன்னும் ஒல்லியாக ஒரு பிடிக்குள் ஒடிந்து விழுகிற தோற்றத்துடன் ஒரு அரத பழசான சைக்கிளைத்தள்ளி கொண்டு போவார். அவரின் குரலோ கடும் கனத்துடன் இருக்கும். எப்போதும் சிவப்புத்துண்டும் அழுக்கு வேட்டி சட்டையுடனும் படியாத கோரைத்தலை முடியுடனும் கடந்து போகிறவரை அலட்சியமாக பார்த்திருக்கிறேன்.
நிறைய நாட்கள் மார்க்ஸ் தன் தந்தையுடன் சைக்கிளில் போகையில் கையாட்டி விட்டு போவான். ஒரு ஞாயித்துகிழமை சர்ச்க்கு அம்மாவுடன் போகையில், அம்மா சொன்னாள், தம்பி நீ போய் பெஞ்சில உட்கார்ந்துக்கோ என்று. நான் பாடல்களையும் ஆமேன்களையும் ரசித்தபடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். பாதிரியார் அப்பத்தை பிட்டு ஏசுவின் உடல் என்றபடிக்கு பிட்டு பங்கிட்டு கொண்டிருந்தார். அம்மா போய் பெற்றுகொண்டு தலையில் இட்ட முக்காடுடன் முடுங்காலில் அமர்ந்து ஜெபிக்கத்தொடங்கினாள்.
எல்லாம் முடிந்து குறுக்கு வழியாக வயலின் வரப்போடு வருகையில் மார்க்ஸின் அப்பாவை பார்த்தேன். எதிரே யாரோ இருவருடன் வந்து கொண்டிருந்தார். அம்மா என்னை பிடித்து இழுத்து வரப்பை விட்டு கீழிருங்கி வழி தர சொல்ல, ஏன் அவர் எறங்கி போக மாட்டாரா என்றேன்.
நான் கேட்டது அவர் காதில் விழுந்திருக வேண்டும். அக்கா பையனை நல்லா வளத்து வச்சிருக்கே, அப்பறம் ஏன் சர்ச்சுக்கு கூட்டி போய் கெடுக்கிறே என்றபடிக்கு, மாப்பிளை நீ யாருக்கும் வழி தர வேணாம் , உன் போக்குல போ என்ற படி தலை கோதி விட்டுப்போனார்.
அவர் போகிற வரைக்கும் அமைதியாக இருந்த அம்மா, தம்பி நீ இன்னைக்கு பெஞ்சில உட்கார்ந்த தானே சர்ச்ல அதுக்கு இவர்தாண்டா காரணம் என்றாள். எதுவும் புரியாமல் ஏன் என்றேன்.
பின் வருகிறவர்களை சிறிது போக விட்டு சொல்லத்தொடங்கினாள்.
எங்கள் ஊர் சிறிய ஊர் வழக்கமான கிறிஸ்துவ சாதி அமைப்பில் ஆதி திராவிட கிறிஸ்துவர்கள் ஏழைகளாகவும் , கூலி வேலை செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். முதலியார் கிறிஸ்துவர்கள் சர்ச்சின் நிர்வாக அமைப்பில் முழுவதுமாய் இருந்தார்கள். பில்லாவடந்தை சர்ச் மிகப்பெரிய சர்ச். அந்தப்பகுதியின் பத்துக்கு மேற்பட்ட சிற்றூர்களுக்கு உள்ள சர்ச். கிட்டத்தட்ட 25 வேலி அளவிற்கான நிலம் அதற்கு இருந்தது ( இப்போதும் இருக்கிறது விற்றது போக மீதம் ). முதலியார்கள் நிலசுவாந்தாரர்களாகவும் சர்ச்சின் நிர்வாகிகளாகவும் இருந்ததால் தன் நிலத்தில் கூலிகளாய் வேலை செய்கிறவர்கள் தனக்கு சமமாய் சர்ச்சில் அமரக்கூடாதென தியேட்டர் அமைப்பை செய்திருந்தார்கள். பெஞ்சுகளும் முன் வரிசையும் அவர்களுக்குரியது. பின் வரிசையும் வாசலுக்கு வெளி இடமும் ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு உரியது . பாதிரியாராய் இருப்பவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினாராய் இருப்பதாலேயே இந்த பாகு பாட்டை தொடர்ச்சியாய் கையாண்டு கொண்டிருந்தார்கள்.
கீழ வெண்மெணி சம்பவங்களுக்குப்பிறகு கம்யூனிசமும் திராவிடர் கழகமும் சாதியமைப்பை எதிர்த்து எல்லா இடத்திலும் போராடத்தொடங்கின கால கட்டத்தில் , தொடர்ச்சியான சாதியமைப்பை முன்னிறுத்தும் பாதிரியார்களை கம்யூனிச கட்சியில் இருந்த மார்க்ஸின் அப்பா கண்டித்து கேட்கத்துவங்கினார். அவரின் மேல் பாதிரியார்கள் திருட்டு வழக்கை ஜோடித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட 3 மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் சர்ச்க்கு வந்தவர், பாதிரியாரை எதிர்த்து கேட்க சண்டை சச்சரவாகி அவரை அடித்து துரத்தி வைத்திருக்கிறார்கள்.
கட்சியில் தொடர்ச்சியான போராட்டகள் குறித்தும் வழக்கு குறித்தும் பேசி விட்டு எதாச்சும் செய்யனும் தோழர், சாதியை கட்டிக்காக்கிற பாதிரியை எதாச்சும் செய்யனும் தோழர் என்றபடி வீட்டுக்கு போய் விட்டிருக்கிறார் மார்க்ஸின் அப்பா.
தன் தெருவில் இறந்த ஆதிதிராவிட கிழவனுக்கு ப்ரேயர் செய்ய அழைக்க போனவர்களை பாதிரியார் அவமரியாதை செய்து அனுப்பி வைத்ததை மார்க்ஸின் அப்பாவிடம் ஊர்க்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.
அடுத்த வாரத்தில் மீன் வாங்க புல்லட் வண்டியில் போன பாதிரியாரை அரிவாளால் வெட்டி விட்டார் மார்க்ஸின் அப்பா.
மருத்துமனையில் சேர்க்கப்பட்ட பாதிரியின் 4 விரல்கள் துண்டாடப்பட்டிருந்தன.மார்க்ஸின் அப்பா கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகள் சிறை கொண்டு செல்லப்பட்டார்.
4 ஆண்டுகளில் சர்ச்சின் பெஞ்சுகள் எல்லார்க்கும் பொதுவாய் மாற்றப்பட்டிருந்தன. சர்ச்சின் நிலங்கள் பெரும்பாலானா ஏழைக்கூலிகளுக்கு சிறிது பிரித்து தரப்பட்டிருந்தது. அந்த நிலத்தையோ வீட்டு மனையையோ மார்க்ஸின் அப்பா பெற்றுக்கொள்ளவில்லை.



